மொட்டை மாடிக்கு துணி எடுக்கச் சென்ற பெண்.. மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

553

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காலிமேடு வீரசிவாஜி தெருவில் மோகன்தாஸ் – இளவரசி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

அந்த வகையில், காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. திடீரென மழை வந்ததால் மோகன்தாஸின் மனைவி இளவரசி தனது வீட்டின் மொட்டை மாடியில் காய வைத்த துணிகளை எடுக்கச்சென்றார்.

அவர் மொட்டை மாடிக்கு சென்று துணிகளை எடுத்துக்கொண்டிருக்கும்போதே, திடீரென பயங்கரமாக இடிவிழுந்தது. அதோடு மின்னல் தாக்கியதில் இளவரசி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிய மோகன்தாஸ் மயங்கி கிடந்த தனது மனைவி இளவரசியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அங்கு இளவரசியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். சம்பவம் குறித்து அறிந்த தாலுகா போலீசார் அப்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதி மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.