சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்… தந்தை கண் முன்பே ஆற்றில் மூழ்கி 6 வயது சிறுமி பலி!!

487

தமிழகத்தில்..

தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சதமடித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில், குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு பகுதிக்கு சுற்றுலா சென்ற இடத்தில், தந்தையின் கண் முன்னாலேயே, காவிரி ஆற்றில் மூழ்கி 6 வயதான மகள் உயிரிழந்த சம்பவம் கொண்டாட்டமாக சுற்றுலா கிளம்பியவர்களை பெரும் சோகத்திற்குள்ளாக்கி உள்ளது.

திருச்சி அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் சதாம் உசேன். இவரது ஆறு வயதான மகள் ரிஸானா தஸ்ரின். கோடை விடுமுறை விடப்பட்டிருந்ததால், ஞாயிற்றுக்கிழமை சதான் உசேனுக்கும் விடுமுறை என்பதால், தனது குடும்பத்துடன் திருச்சி முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமையன்று சென்றார்.

முக்கொம்பில், காவிரி ஆற்றின் நடுவில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரில் குடும்பத்தினருடன் அவர்கள் குளித்தனர். கோடை வெய்யிலுக்கு இதமாக தண்ணீரில் ஆட்டம் போட்டப்படியே சிறுமி ரிஸானா தஸ்ரினும் அவர்களுடன் சேர்ந்து குளித்து கொண்டிருந்தாள்.

குளித்து கொண்டிருந்த நிலையில், திடீரென ரிஸானா தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளாள். சிறிது நேரத்தில் மகளைக் காணாவில்லை என்பதனை உணர்ந்த சதாம் உசேன், பதறி போய், தண்ணீரில் மகளைத் தேடினார்.

அப்போது ரிஸானா தஸ்ரின் தண்ணீரில் மூழ்கி இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள், ரிஸானா தஸ்ரின் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வாத்தலை போலீசார், ரிஸானா தஸ்ரினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரிஸானா தஸ்ரினின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என ஏராளமானவர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு ரிஸானா தஸ்ரினின் உடலை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவளது உடலை எடுத்து செல்ல முயன்றனர்.

அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அரசு மருத்துவமனை போலீசார் ரிஸானா தஸ்ரினின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சமாதானம் அடைந்த உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.