பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சிறுமியின் மரணம்.. விசாரணையில் வெளியான காரணம்!!

639

கம்பளையில்..

கம்பளை-உடுவெல்ல பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்க வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட பெரசிட்டமோல் மருந்து அளவுக்கதிகமாக வழங்கப்பட்டதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

கம்பளை உடஹெந்தென்ன, உடுவெல்ல தாமரவல்லி பகுதியை சேர்ந்த ஷியாமலி தருஷி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அந்த சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னர் சிறுமியை அப்பகுதியிலுள்ள ஒரேயொரு கிராமிய வைத்தியசாலையான குருந்துவத்தை பிரதேச வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை வைத்தியசாலை வைத்தியர் பரிந்துரைத்த மருந்தை வைத்தியசாலையின் மருந்தகத்தில் இருந்து எடுத்துச் சென்ற போதிலும் சிறுமியின் நோய் குணமாகவில்லை.

இரண்டாவது மருந்திலும் குணமடையாததால் சிறுமியை கம்பளை வைத்தியசாலைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். கம்பளை வைத்தியசாலையின் வைத்தியர்கள், சிறுமியை பரிசோதித்ததுடன் சிறுமிக்கு குருந்துவத்தை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளையும் பரிசோதித்துள்ளனர்.

அதன்படி, சிறுமிக்கு அளவுக்கு அதிகமாக மருந்து கொடுக்கப்பட்டதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குருந்துவத்தை வைத்தியசாலையில் மருந்துகளை வழங்க போதுமான கடதாசி பொதிகள் இல்லாமையினால், மருந்துகளை கடதாசிகளில் சுற்றி அதனுள் மருந்துகளின் அளவுகள் எழுதி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட மருந்துகளில் வைத்தியர் கடதாசியின் வெளிப்புறம் ஒரு மாத்திரை வீதம் வழங்குமாறும், மருந்து வழங்கியவர் கடதாசியின் உட்புறம் இரண்டு மாத்திரை வீதம் வழங்குமாறும் எழுதியுள்ளனர்.

எவ்வாறாயினும், பெற்றோர் கடதாசியின் உட்புறம் குறிப்பிடப்பட்டிருந்தவாறு இரண்டு மாத்திரைகள் வீதம் வழங்கி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் நிஹால் வீரசூரிய தெரிவித்துள்ளார்.