ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. ஓடோடி காப்பாற்ற முயன்ற நண்பனுக்கு நேர்ந்த சோகம்!!

663


திருப்பத்தூரில்..



திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்ற இளைஞர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தார். எனவே தன்னை வழியனுப்ப இருந்து நண்பர்களை அழைத்துள்ளார். அதன்படி அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 24) வந்துள்ளனர்.



சென்னை வந்த அவர்கள் விமான நிலையத்துக்கு செல்வதற்காக இரவு நேரத்தில் பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த இரயில் மாம்பலம் – சைதாப்பேட்டை இடையே சென்று கொண்டிருக்கும்போது வாசலில் நின்று கொண்டிருந்த ஆசைத்தம்பி திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார்.




இதனை கண்டதும் பதறிப்போன நண்பர்கள் சைதாப்பேட்டையில் அந்த இரயில் நின்றவுடன், கீழே விழுந்த ஆசைதம்பியை காப்பாற்ற அங்கிருந்து தண்டவாளத்தில் ஓடியுள்ளனர்.


அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் கவுதம் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், கீழே விழுந்த ஆசைத்தம்பியை மீட்டு உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கவுதம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.


தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், வேறொரு இரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.