இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று.. இருவர் மரணம்!!

973

இலங்கையில்..

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (29.04.2023) உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 தொற்று மீண்டும் சமூகம் முழுவதும் பரவும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பாக முகக்கவசம் அணிந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, மருத்துவமனை வட்டாரங்களின்படி, கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட அதிக எண்ணிக்கையான நோயாளிகள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.