ஏழு மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு.. கணவர் வீட்டு வாசலில் அடக்கம் செய்த உறவினர்கள்!!

556

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (26) என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த நாகேஸ்வரி (22)என்ற பெண்ணுக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அரவிந்த் சென்னையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நாகேஸ்வரி 7மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

திருமணம் ஆனதிலிருந்து நாகேஸ்வரியிடம் அரவிந்த் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி நாகேஸ்வரி தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.

மீண்டும் சமாதானம் பேசி கணவருடன் சேர்த்து வைத்திருந்தனர். தொடர்ச்சியாக அரவிந்த் மற்றும் அவரது தாய், தந்தை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே, கர்ப்பிணி நாகேஷ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி, தனது கணவர் வீட்டில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகேஸ்வரி விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரவிந்த் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் நாகேஸ்வரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

ஆனால் கர்ப்பிணியின் பெற்றோர், உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இது தற்கொலை அல்ல, அப்பெண்ணின் கணவர் வீட்டார் கொலைச் செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் நேற்று மாலை நாகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றோர், நேராக அன்னவாசல் அருகே உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நாகேஸ்வரியின் தற்கொலைக்கு காரணமான அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உரிய விசாரணை நடத்தி கர்ப்பிணி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.