”எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றி”.. +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவி ஸ்ரேயா நெகிழ்ச்சி.!!

928

தமிழ்நாட்டில்..

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 337 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது.

மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதி முடித்து விட்டு தங்களது முடிவுக்காகக் காத்து மாணவர்கள் கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது.

அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர்.

இந்த தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் 97.05% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பெற்றது. 96.61% பெற்று திருப்பூர் மாவட்டம் இரண்டாவது இடத்தையும், 95.96% பெற்று பெரம்பலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலிதொழிலளியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பபெண்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மேலும் தமிழ்ப்பாடத்தில் 2 மாணவிகள் 100க்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதேபோன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர் தமிழ்ப் பாடத்தில் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணக்குப்பதிவியல் 58, கணினி பயன்பாடு 59 என மொத்தம் 337 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். தேர்ச்சி பெற்ற மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உட்படப் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பேசிய மாணவி ஸ்ரேயா, “தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி. எனது திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த பெற்றி இது. திருநங்கைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது உயர்கல்விக்கு அரசு உதவினால் நான்றாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.