மகள் தற்கொலை செய்த நாளில் மனைவிக்கு வந்த வாட்ஸ்அப் வீடியோ : தந்தை எடுத்த விபரீத முடிவு!!

719


கன்னியாகுமரியில்..



கன்னியாகுமரி அருகே மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல், தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பறையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி அமல்ராஜ் (40). தச்சு தொழிலாளியான இவர், நேற்று மாலை வீட்டின் அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக இரணியல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.




தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரணியல் போலீசார், உறவினர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று அவரது சடலத்தை மீட்டு அவரது மனைவி சத்தியகலாவிடம் விசாரணை நடத்தினர்.


விசாரணையில் ஆண்டனி அமல்ராஜ் – சத்தியகலா தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்ததாகவும், மனமுடைந்த 9-ம் வகுப்பு படிக்கும் இளைய மகள் ஸ்ரீலட்சுமி வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அன்று முதல் மன வேதனையில் இருந்து வந்த ஆண்டனி அமல்ராஜ் குடிபோதையில் தன்னிடம் தகராறில் ஈடுபடுவதோடு, மகள் சென்ற இடத்திற்கே தானும் சென்று விடுவேன் என்று கூறி வந்துள்ளார்.


தொடர்ந்து, கணவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் சத்தியகலா ஒரு வாரத்திற்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு மூத்த மகளுடன் குளச்சலில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் தான் நேற்று மாலை வீட்டில் இருந்த ஆண்டனி அமல்ராஜ், “நான் எனது மகள் சென்ற இடத்திற்கே செல்கிறேன். எனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை.

எனது உடல் உறுப்புக்களை யாருக்காவது தேவைப்பட்டால் தானம் செய்யுங்கள்,” என உருக்கமாக பேசி வீடியோ பதிவு செய்து மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளார்.

இதனால், பதறிப்போன சத்தியகலா, தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும், அவர் வந்து பார்த்த போது வீட்டின் கதவுகள் மூடப்பட்டிருந்த நிலையில், ஜன்னல் வழியாக பார்த்த போது ஆண்டனி அமல்ராஜ் வீட்டில் அறையில் உள்ள பேன் ஷூக்கில் போர்வையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றிய இரணியல் போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, மனைவி சத்தியகலா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்து ஆண்டனி அமல்ராஜ் மனைவிக்கு அனுப்பிய வீடியோவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதம் கழித்து அதே தேதியில் துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.