பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் மர்மமான முறையில் மரணம்!!

702

வெலிக்கடையில்..

கொழும்பு – வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண் தங்க நகை திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரினால் 42 வயதான ஆர்.ராஜகுமாரி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தமது வீட்டில் பணிபுரிந்த போது தங்க நகையைத் திருடியதாக குறித்த பெண் மீது தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரான சுதர்மா ஜயவர்தன வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு குறித்த பெண் வெலிக்கடை பொலிஸாரினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இருப்பினும், அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் தான் உயிரிழந்ததாக அவரின் கணவர் செல்வதுறை யேசுராஜ் குறிப்பிட்டுள்ளார். பொலிஸாரின் அறிக்கையின் பிரகாரம் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தொடர்பில் பகிரங்கத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம் கடந்த 12ஆம் திகதி உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், 13ஆம் திகதி பதுளை தெமோதரையில் சடலத்தை அடக்கம் செய்ய உறவினர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனிடையே, உயிரிழந்த பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தனது மனைவியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.