தாயின் முன்னிலையில் யுவதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை : பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை!!

837

கொழும்பில்..

விசேட தேவையுடைய யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு – கொஸ்கம பகுதியிலுள்ள கான்ஸ்டபிளின் வீட்டில் பணிபுரிந்து வரும் 26 வயதான விசேட தேவையுடைய யுவதியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குப்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யுவதியின் தாயார் முன்னிலையில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நேற்றைய தினம் (20.05.2023) பாதிக்கப்பட்ட யுவதி தனது தாயாருடன் கொஸ்கம பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்பேரில் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கைது செய்யத் தேடப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயாரைக் கவனிப்பதற்காகக் குறித்த யுவதியும் அவரது தாயும் இரண்டு வருடங்களாக கான்ஸ்டபிளின் வீட்டில் தங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள், தனது பணப்பையிலிருந்த 10,000 ரூபா பணத்தைக் காணவில்லை எனக் கூறி தாய் மற்றும் மகளை அறைக்கு அழைத்துச் சென்றே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளானதாகக் கூறப்படும் 26 வயதுடைய விசேட தேவையுடைய யுவதியை, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.