பண்டாரவளையில் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிய மாணவி : தீவிர விசாரணையில் பொலிஸார்!!

797

பண்டாரவளையில்..

பண்டாரவளை நகரில் கடத்தல்காரர்களிடமிருந்து மாணவியொருவர் புத்திசாலித்தனமாக தப்பித்து சென்றுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (19.05.2023) பதிவாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் (20.05.2023) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பண்டாரவளை – துஹுல்கொல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 10 வயதுடைய மாணவியே கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச்சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

பாடசாலை முடிந்து வீடு செல்வதற்கு பேருந்துக்காக குறித்த மாணவி தனியாக நடந்து சென்றபோது, வான் ஒன்றில் வந்த நபரொருவர் மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சிறுமியை தம்முடன் அழைத்துவருமாறு சிறுமியின் தாயார் கூறியதாக தெரிவித்து சிறுமியை வானில் ஏற்றிக் கொள்ள முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது அச்சமடைந்த மாணவி பண்டாரவளையில் அமைந்துள்ள கடை ஒன்றுக்குள் சென்று இந்த விடயம் பற்றி கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தாயாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், மாணவி தனது தாயுடன் சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.