கொழும்பில் நடிகையை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்ற இளைஞன்!!

1142


கொழும்பில்..



முகப்புத்தக கணக்கின் ஊடாக நடிகையிடம் இருந்து 65 லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு திருமணம் செய்வதாக உறுதியளித்து ஏமாற்றிய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



கொழும்பு மற்றும் கம்பஹா நீதிமன்றங்களில் கடமையாற்றும் இரண்டு சட்டத்தரணிகளை திருமணம் செய்வதாக கூறி 99 லட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஏற்கனவே அந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.




சந்தேகநபர் மஹர சிறைச்சாலையினரால் மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ரத்னபுர கஹவத்தை பகுதியைச் சேர்ந்த பி.எல்.லசந்த லியனகே என்ற 27 வயதுடைய சந்தேகநபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


மினுவாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட 23 வயதுடைய இளம் பெண் தற்போது கொழும்பு அழகியல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருவதுடன் நடிகையும் ஆவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் பிரபல கிரிக்கட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் புகைப்படங்களுடன் கூடிய முகப்புத்தக கணக்கை, சமூக நல ஆர்வலர் எனக் கூறி சந்தேகநபர் ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.


கொழும்பு நீதிமன்றில் பணியாற்றும் சட்டத்தரணி ஒருவரை முகபுத்தகத்தில் கணக்கின் ஊடாக திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் அதே நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.