மனைவியின் மீது தீராத காதல்… இறந்த மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

781

விருதுநகரில்..

உயிரிழந்த மனைவியின் நினைவாக சிலிக்கான் சிலையை வடிவமைத்து நினைவு தினத்தை அனுசரித்த சிவகாசி தொழிலதிபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேஷனல் காலனியை சேர்ந்தவர் நாராயணன். 70 வயதாகும் இவர் ஒரு தொழிலதிபர் ஆவார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருக்கும் நிலையில், இவரது மனைவி ஈஸ்வரி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார்.

மனைவி மீது தீராத அன்பு கொண்டுள்ள நாராயணன், அவர் இறந்த பிறகும் அவரது நினைவாலே இருந்துள்ளார். மேலும் இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் தனது மனைவி நினைவாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் தனது மனைவி இறந்த பிறகு அவரது நினைவாக சிலை ஒன்றை செய்ய எண்ணியுள்ளார். மேலும் சிலிக்கான் சிலையை செய்தால் தன்னுடனே வீட்டுக்குள் இருக்கலாம் என்ற எண்ணத்தில் அதனை செய்ய எண்ணியுள்ளார்.

அதன்படி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் சிலை செய்ய பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளார். தனது மனைவியின் நினைவு உலுக்கு முன்பாகவே அதனை செய்ய கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளை அவரது வீட்டில் சிலையை வைத்து அனுசரித்து நினைவுகூர்ந்தார்.

இந்த சிலை தத்ரூபமாக அவரது மனைவி ஈஸ்வரியின் உண்மையான உருவம் போல இருந்துள்ளது. நினைவு நாளான இன்று அவரது வீட்டில் அமைத்து நாராயணன் நினைவுகூர்ந்தார்.

இந்நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து சிலையை வழிபட்டனர். எளிதில் தூக்கிச் செல்லும் வகையிலான அந்த சிலையை, வீட்டின் ஹாலில் உள்ள சோபாவில் வைத்துள்ளார். மேலும் வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார்.

மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாகவும், அவர் உயிருடன் இருப்பது போன்ற மன நிறைவு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டில் நடக்கும் அனைத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் மனைவி பங்கேற்பது போல் இருக்கிறது என்ற மன நிறைவு ஏற்படுவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.