10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்… ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு!!

1226

தமிழகத்தில்..

தமிழகத்தில் தான் பாலியல் பலாத்காரங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என நினைத்தால், உத்தரப் பிரதேச மாநிலத்தில், பொள்ளாச்சி சம்பவங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அளவுக்கு சமூகத்தில் புரையோடி இருக்கிறது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பள்ளியில் வைத்து 10 வகுப்பு மாணவியைக் கதற கதற கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைச் செய்த சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. இது குறித்து எந்த விதமான கண்டனங்களும் இல்லாமல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்து, அதனுள்ளே பழைய செங்கோலை வைத்து சந்தோஷப்படுகிறோம்.

அதே டெல்லியின் இன்னொரு ஓரத்தில், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராடி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் சன் பீம் என்ற தனியார் பள்ளியின் முதல்வர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீவஸ்தாவாவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார்.

பள்ளியின் முதல்வர் அழைத்ததால், காலை 9 மணிக்கு மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

பதறிப் போன பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து கேட்ட போது பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தந்துள்ளனர்.

மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்தகறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தேகமடைந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அயோத்தி போலீசார் பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுபன் சிங் தெரிவித்துள்ளார்.