புகாரளித்த மனைவி கொலை… தற்கொலை செய்துகொண்ட கணவன்.. நடந்தது என்ன?

726

கேரளாவில்..

தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார்.

கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன தம்பதியினர் வரை இடம்பெற்றிருந்தனர்.

இந்த வழக்கை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தவர் கோட்டயம் கறுக்கச்சால் பகுதியைச் சேர்ந்த ஜூபி ஜேக்கப் (28) என்ற இளம்பெண்தான். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜூபி ஜேக்கப் போலீஸில் புகாரளித்தார்.

அதில், தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துதான் பெரிய நெட்வொர்க்கை போலீஸார் சுற்றிவளைத்தனர்.

இந்த வழக்கைத் தொடர்ந்து புகாரளித்த இளம்பெண் ஜூபி ஜேக்கப் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ஜூபி ஜேக்கப் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரின் கணவர் ஷினோ மேத்யூ இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என ஜூபி ஜேக்கப்பின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ஜூபி ஜேக்கப்பின் கணவர் ஷினோ மேத்யூவை போலீஸார் தேடிச் சென்றபோது அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஷினோ மேத்யூ சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். பார்ட்னர் ஸ்வாபிங் முறைக்கு அடிமையான கணவன், அவரால் பாதிக்கப்பட்ட மனைவி என இருவரின் உயிரும் பறிபோன சோக சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.