மரத்தின் மீது மோதிய கார்.. தீ பிடித்து எரிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி!!

2034

மத்திய பிரதேசத்தில்..

மத்திய பிரதேசத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி தீ பிடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இது குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலிஸார் தீயை அணைத்து காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரில் இருந்தவர்கள் உடல் கருகிய நிலையிலிருந்தனர். இதையடுத்து அவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி உட்பட 4 பேர் திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.