தவறிவிழுந்த சாரதியால் தறிகெட்டு ஓடிய பேருந்து : பயணிகள் உயிரை காத்த இராணுவ வீரருக்கு பாராட்டு!!

1071

கண்டியில்..

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார்.

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸில் பயணித்த இளைஞன் நந்தன யசரத்ன தடுத்து நிறுத்தி பயணிகளினுயிரை காப்பாற்றியிருந்தார்.

இலங்கையின் நான்காவது காலாட்படையின் கோப்ரல் கே.எம்.பி.ஆர்.கே.எல் கருணாரத்ன என்ற கோப்ரலே இவ்வாறு பயணிகளின் உயிரை காப்பற்றி பாராட்டைப் பெற்றவராவார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஆலோசனையின் பேரில், குறித்த கோப்ரல் வியாழக்கிழமை (01) இராணுவத் தளபதியின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, இராணுவத் தளபதியினால் அவருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.

உடுதும்பர பிரதேசத்திலிருந்து குறித்த பஸ் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், வளைவில் திரும்பும் போது சாரதியின் ஆசனத்திலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டதில், பஸ் சாரதியின்றி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

இந்நிலையில், அந்த பஸ்ஸில் பயணித்த இராணுவ கோப்ரல் துரிதமாக செயற்பட்டு சாரதி இருக்கைக்குச் சென்று பெரும் பிரயத்தனத்தின் பின்னர் பஸ்ஸை நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.