திருமணமான மூன்றாவது வாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!!

458

கோவையில்..

காதலித்தவளையே திருமணம் செய்து கொண்ட பின்னரும், காம வெறி அடங்காமல், மனைவியின் தோழியுடன் கள்ளக்காதல் செய்து வந்த காதலன், மனைவி எதிர்த்ததால், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்துள்ளது துயரத்தின் உச்சம். பெற்றோர் பேச்சைக் கேட்காமல், காதல் பெயரில் இது போன்ற சைக்கோக்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்களுக்கு இது படிப்பினை என்று சொல்லி புலம்புகிறார்கள் ரமணியின் கல்லூரி ஆசிரியர்கள்.

கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மாதம் 6ம் தேதி சஞ்சயைக் கல்யாணம் செய்து கொண்டார் ரமணி. இருவரும் ஒன்றாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், ரமணி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லி, மூச்சு பேச்சில்லாமல் கடந்த 29ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார் சஞ்சய்.

ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே ரமணி உயிரிழந்ததாக சொல்லி, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர்.

ரமணியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக, ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேருமே முன்னுக்கு பின் முரணான கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் விசாரணையில் சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் படித்த ரமணியின் தோழியும், கல்லூரி மாணவியுமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதை ரமணி தட்டி கேட்டு இனி அந்த பெண்ணுடன் தனிமையில் சந்திக்க கூடாது, பேச கூடாது என்று கணவனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து கோபத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்தைப் பிடித்துள்ளார். அதன் பின்னர், கீழே தள்ளி ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும் தெரிகிறது. இதனால் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

பின்னர், தனது தாய், தந்தையிடம் சஞ்சய் ரமணியைக் கொன்றது குறித்து கூறியுள்ளார். இதனால் கொலையை மறைப்பதற்காக ரமணியின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து, சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் செட்டப் செய்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றி, உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடியது தெரிய வந்தது. விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 20 நாட்களில் ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.