காதலிக்கு பிறந்தநாள் சப்ரைஸ் கொடுக்க சென்ற காதலன்… கொலை செய்த தந்தை!!

648

கோவையில்..

காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை பெண்ணின் தந்தை குத்தி கொலை செய்த சம்பவம் கோவையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த லோடு மேன் பிரசாந்த். இவருக்கு 21 வயதாகிறது.

இவர் செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த 18 வயதான இளம்பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பிரசாந்துக்கு குடி பழக்கம் இருப்பதால் பெண் வீட்டார் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.

இதனால் இருவர் வீட்டிலும் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடத்தி ஒரு வழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், இளம்பெண்ணுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு காதலியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து சொல்ல பிரசாந்த் திட்டமிட்டுள்ளார்.

இதனால் பிரசாந்த் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று இரவு மது குடித்துள்ளார். அதனை அடுத்து நள்ளிரவு 12 மணி அளவில் பிரசாந்த் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து ஒரே வண்டியில் காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு வீடு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரசாந்த் காதலியின் வீட்டு கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்து வந்த இளம்பெண்ணின் தந்தை என்ன ஏது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரசாந்த், காதலியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு செல்கிறேன் என கூறியுள்ளார். ஆனால், பிரசாந்த் குடிபோதையில் இருந்ததால் அவர்கள் உள்ளே விடவில்லை. மகளையும் வெளியே வர அனுமதிக்கவில்லை.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளம்பெண்ணின் தந்தை உறவினருடன் சேர்ந்து பிரசாந்தை கத்தியால் மார்பில் குத்தியுள்ளார்.

இதனால், வலி தாங்காமல் துடித்து மயங்கிய பிரசாந்தை நண்பர்கள் தாங்கள் வந்த பைக்கில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே பெட்ரோல் தீர்ந்துபோனதால் ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிரசாந்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள செட்டிபாளையம் போலீசார் வாலிபரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இளம்பெண்ணின் தந்தை மற்றும் உறவினரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.