சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அழிப்பதாக கூப்பிட்ட காதலன்.. நம்பி சென்ற காதலிக்கு நடந்த சோகம்!!

635

கன்னியாகுமரியில்..

தான் காதலித்தப் பெண்ணைக் கொலைசெய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டிய இளைஞர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே 23 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்த சமயத்தில், கல்லுத்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த பெர்ஜின் ஜோஸ்வா (23) என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

பின்னர் அவர்கள் இருவரும் காதலித்திருக்கின்றனர். இருவரும் பல இடங்களுக்குச் சென்று சேர்ந்து போட்டோ எடுத்திருக்கின்றனர். அந்தப் பெண் தற்போது மேற்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், இளம்பெண் கடந்த இரண்டு மாதங்களாக பெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். இது பெர்ஜின் ஜோஸ்வாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் லேப்டாப்பில் இருப்பதாகவும், `அவற்றை இருவரும் சேர்ந்து டெலிட் செய்யலாம் வா…’ எனக் கூறி இளம்பெண்ணை போனில் அழைத்திருக்கிறார் பெர்ஜின் ஜோஸ்வா.

இருவரும் மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறமுள்ள தென்னை தோப்பில் சந்திப்பதாக முடிவானது. நேற்று மதியத்துக்கு மேல் இளம்பெண் அங்கு சென்றிருக்கிறார்.

அங்கு நின்றிருந்த பெர்ஜின் ஜோஸ்வா, தான் மறைத்து வைத்திருந்த வெட்டுக்கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டியிருக்கிறார். இளம்பெண் அலறியதால் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதைத் தொடர்ந்து பெர்ஜின் ஜோஸ்வா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அங்கு திரண்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மார்தாண்டம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து பெர்ஜின் ஜோஸ்வாவைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஓர் இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக மார்த்தாண்டம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.

போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அது பெர்ஜின் ஜோஸ்வா எனத் தெரியவந்தது. அவருடைய உடலை போலீஸார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

“காதலியைக் கொலைசெய்துவிட்டு தற்கொலை செய்யும் திட்டத்துடன் இருந்த பெர்ஜின் ஜோஸ்வா, இளம்பெண்ணை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் முண்டவிளைப் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அப்போது அந்த வழியாக வந்த கோட்டயம் – நாகர்கோவில் ரயில் மோதியதில், பெர்ஜின் ஜோஸ்வா தலை துண்டாகி இறந்துவிட்டார்” என்கிறார்கள் போலீஸார். போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.