லண்டனில் கோர விபத்து.. யாழ்.தமிழர்கள் மூவருக்கு நேர்ந்த சோகம்!!

1286

லண்டனில்..

இங்கிலாந்தின் தென் கிழக்கு பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் (West Sussex) பகுதியில் இரண்டு கார்கள் மோதுண்ட விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

A285 வீதியில் சிசெஸ்டர் (Chichester) பகுதியில் சனிக்கிழமை மாலை இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் அங்கு விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் அடங்குவதாகவும், விபத்தில் சிக்கிய ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மற்றைய காரில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என்ற தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

திருமணக் கொண்டாட்டம் ஒன்றுக்காக கனடாவில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் உயிரிழந்துள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ளதாகவும் லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் பயணம் செய்த பி.எம்.டபிள்யூ காரை செலுத்தி சென்றவர் எனக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிசெஸ்டர் (Chichester) நகர் அருகே விபத்து நடைபெற்ற Duncton கிராமப் புறத்தில் வீதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு கார் விபத்து எவ்வாறு நடந்தது என்பது தொடர்பாக பொலிஸார் பொதுமக்களது உதவியை நாடியுள்ளனர்.