விமானத்தின் இரு டயர்கள் வெடித்த நிலையில் அதிஸ்டத்தால் உயிர் தப்பிய பயணிகள்..!

1558

இலங்கை அரசுக்கு சொந்தமான போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இவ் விமானம் நேற்றிரவு 7 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

70 பயணிகளுடன் வந்த அந்த விமானத்தை ஓடுபாதையில் இறக்கிய விமானிகள் சக்கரங்களின் பிரேக் பிடிக்கவில்லை என்று கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் அளித்தனர்.

இதனையடுத்து, அந்த விமானத்தை பாதுகாப்பாக இழுத்து வருவதற்கான ஏற்பாடுகளை டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தனர்.

இலங்கை விமானத்தின் அருகே சென்று பார்த்தபோது 2 டயர்களும் வெடித்து இருந்தது தெரிய வந்தது.

காற்று இல்லாத டயருடன் விமானத்தை இழுத்து வருவது ஆபத்து என்பதால் பயணிகள் அங்கேயே இறங்கவைத்து அவர்களை பஸ்களின் மூலம் விமான நிலைய கட்டிடத்திற்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

விமானி தக்க நேரத்தில் தகவல் தெரிவிக்காமல் இருந்தால் டயர் வெடித்த அந்த விமானம் ஓடுபாதையில் தாறுமாறாக ஓடி பெரிய விபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இலங்கை விமானம் ஓடுபாதையின் குறுக்கே நின்றதால் மற்ற விமானங்கள் எல்லாம் மாற்று ஓடுபாதை வழியாக திருப்பி விடப்பட்டன.

புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்ட பின்னர் அந்த விமானம் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் கூறினர்.