தேனியில்..
தேனி மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் போஸ் இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார் . இவருடைய மனைவி முருகேஸ்வரி . இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் முருகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
வளைகாப்புக்கு பிறகு அதே ஊரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.இன்னும் ஓரிரு நாட்களில் பிரசவம் நடந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய குடும்பத்தினர் அதற்குரிய முன்னேற்பாடுகளில் இருந்தனர்.
காலையில் முருகேஸ்வரி தனது பெற்றோர் வீட்டில் இருந்து கிணற்றுக்கு அருகில் ஆட்டுக்குட்டிகளுக்கு இரை பறிக்கச் சென்றுள்ளார். இரை பறித்துக் கொண்டிருக்கும் போது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அவருடைய தாய் மீனா கத்தி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்தார்.
உடனடியாக 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து கர்ப்பிணியை மீட்க முயன்றனர். இதனால் அவரை மீட்க முடியவில்லை என்பதால் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி தீயணைப்பு படைவீரர்கள், தண்ணீரில் குதித்து முருகேஸ்வரியை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, கூலித்தொழிலாளி ஞானசேகரன் என்பவரை போலீசார் அங்கு அழைத்து வந்தனர். அவர் கிணற்றில் குதித்து சில நிமிடங்களில் முருகேஸ்வரி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தார். காலையில் விழுந்தவரின் உடல் சுமார் 6 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டது.
முருகேஸ்வரி உயிரிழந்த நிலையில், அவருடைய வயிற்றில் இருந்த சிசுவும் இந்த உலகை பார்க்கும் முன்பே பரிதாபமாக இறந்தது. பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது, கிணற்றுக்கு அருகில் வளையல்கள் உடைந்து கிடந்தன. அதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து முருகேஸ்வரியின் தாய் மீனா கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டு தான் ஆகிறது என்பதால் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.