பெற்றோர்களின் கவலையீனத்தால் ஒரே நாளில் ஒரே விதத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்கள் மரணம்!!

1004

வேலூரில்..

வேலூர் மாவட்டம், ராஜாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர், பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சரளாவுக்கு சொந்தமான நிலத்தில் முருகேசன் நிலத்தை உழுது கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் கிஷோர் தானும் டிராக்டரில் அமர வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால் ஓட்டுனர், கிஷோரையும் டிராக்டரில் அமர வைத்துக் கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். ஒரு இடத்தில் முருகேசன் டிராக்டரை இயக்கும் போது நிலைதடுமாறி சிறுவன் கிஷோர் கீழே விழுந்தான்.

இதனை கவனிக்காத டிரைவர் எப்போதும் போல டிராக்டரை வைத்து நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது நிலத்தை உழுவதற்கான ரோட்டாவேட்டரில் சிக்கிய கிஷோரின் உடல் பாகங்கள் சிதறியதில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தான்.

இதனை அறிந்ததும் ஓட்டுனர் முருகேசன் தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கிஷோரின் சிதறிய உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதே போல் மற்றொரு சம்பவம் திருப்பத்தூரில் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் . இவரது மகன் 36 வயது சதீஷ்குமார்.

வாணியம்பாடியில் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவரது இளைய மகன் மாதவ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

சதீஷ்குமாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நேற்று மாலை சதீஷ்குமார் தனது விவசாய நிலத்தை உழுது சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது மகன் மாதவ், தந்தைக்கு உதவியாக நிலத்திற்கு சென்றார்.

சதீஷ்குமார் நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்த போது, அதன் மீது அமர்ந்திருந்த சிறுவன் மாதவ் திடீரென தவறி கீழே விழுந்தார். இதில், டிராக்டர் பின்புறத்தில் உள்ள ரோலர் இயந்திரத்தில் சிக்கிய சிறுவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதனை கண்ட சதீஷ்குமார் கதறி துடித்த காட்சி காண்பவர்களை கலங்க செய்தது. இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாதவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.