சாம்பாரில் தவறி விழுந்த 2ம் வகுப்பு மாணவி.. பள்ளியில் நேர்ந்த சோகம்!!

435

கர்நாடகாவில்..

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது அரசு ஆரம்பப் பள்ளி ஒன்று. இந்த பள்ளியில் நவம்பர் 16ம் தேதி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக உணவு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

உணவு தயாரானதும் சாம்பார் பாத்திரத்தை பணியாளர்கள், மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு எடுத்து வந்து வைத்தனர். அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவிகளில், 2ம் வகுப்பு சிறுமி எதிர்பாராதவிதமாக கொதிக்கும் சாம்பாரில் விழுந்துவிட்டார்.

இவருடைய பெயர் மகந்தம்மா சிவப்பா . விழுந்ததும் கதறித்துடித்த சிறுமிக்கு 50 சதவீதம் அளவிற்கு உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக மகந்தம்மாவை பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

முதலுதவி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணை முடிவில் விடுமுறையில் இருந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் லாலாபி நடாஃப் மற்றும் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜூ ஜவான் இருவரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளனர்.

இவர்களுடன் பள்ளியின் தலைமை சமையலர் கஸ்தூர்பாய் தலக்கேறி என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அரசுப் பள்ளியில் சிறுமி சாம்பார் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.