ரீல்ஸ் வீடியோ நட்பால் வந்த வினை : மனைவியை குத்திக் கொன்ற கணவன்!!

266

மேற்குவங்கத்தில்..

மேற்குவங்கத்தில் ரீல்ஸ் வீடியோ நட்பால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமல் பைத்யா (38). இவரது மனைவி அபர்ணா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகள் நர்சரி பள்ளியில் படிக்கிறார். குழந்தைகள் இருவரும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பின்னர், தம்பதிகள் இருவரும் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்ந நிலையில் அபர்ணாவுக்கு சமூக ஊடங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிறைய நண்பர்களின் பழக்கமும் ஏற்பட்டது. அந்த வகையில் அதிகாரி ஒருவருடன் அபர்ணாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த அதிகாரியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார்.

மனைவியின் இந்த செயல் கணவருக்கு பிடிக்கவில்லை. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவ நாளில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்கு சென்ற பின்னர், தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த பரிமல் பைத்யா, தனது மனைவி அபர்ணாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டார். பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அவர்களது மகன், வீட்டின் உள்ளே அவரது தாயார் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அவர் சத்தம் எழுப்பியதையடுத்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சம்பவ இடத்தில் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மீட்டுள்ளோம்.

தலைமறைவாக உள்ள பரிமல் பைத்யாவை தேடி வருகிறோம். ரீல்ஸ் வீடியோ மூலம் சிலருடன் அபர்ணாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. அது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை.

அதனால் தனது கணவருடன் சண்டையிட்டுக் கொண்டு, தனது பெற்றோர் வீட்டிற்கு அபர்ணா சென்று விடுவார். தற்போது அபர்ணா கணவர் வீட்டிற்கு வந்ததும், மீண்டும் சண்டை வந்துள்ளது. ஆத்திரமடைந்த பரிமல் பைத்யா, மனைவி அபர்ணாவை கொன்றுள்ளார்’ என்று கூறினர்.