வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினை முற்றுகையிட்ட மக்கள்!!

1263

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலத்தின் பிரதான வாயிலை பொதுமக்கள் முற்றுகையிட்டமையினால் ஏற்பட்ட பதற்ற நிலமையினையடுத்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. திணைக்கள வாயிலின் முன்பாக இன்று (02.02.2024) காலை இடம்பெற்ற இவ் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தில் சாதாரண மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டினை பெறுவதற்காக நேற்று (01.02.2024) இரவு முதல் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காரியாலயம் முன்பாக வரிசையில் காத்திருந்தமையுடன் வரிசையில் காத்திருந்தவர்களுக்கான வரிசை இலக்கம் பொலிஸாரினால் வழங்கப்பட்டு வரிசையில் நின்றவர்களின் பெயர்களையும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் 85ம் இலக்கம் பெற்ற நபர் வாயிலின் வெளியே வரிசையில் நிற்கத்தக்கதாக இனி எவருக்கும் கடவுச்சீட்டு வழங்க முடியாது எனவும் 160 நபர்களை தாம் ஒருநாள் சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையுடன் 50 நபர்களை சாதாரண சேவையின் கீழ் உள்வாங்கியுள்ளமையினால் பிறிதொரு தினத்தில் வருமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த வரிசையின் நின்ற பொதுமக்கள் 85ம் இலக்கம் பெற்ற நபர் வெளியே நிற்க எவ்வாறு 160ம்இலக்கம் பெற்ற நபர் உள்ளே செல்ல முடியும் என்பதுடன் அங்கு நின்ற பெண்கள் உள்ளடங்கலான மாபியா கும்பல் கடவுச்சிட்டு பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசைகளுக்கு இடையே அவர்களை உள்நுழைக்கின்றனர் என தெரிவித்தமையுடன்,

அங்கு சற்று குழப்பநிலமை ஏற்பட்டிருந்தமையுடன் பின்னர் திணைக்க பிரதான வாயிலினை வழிமறித்தமையுடன் தமது எதிர்ப்பினையும் பொதுமக்கள் வெளிப்படுத்திருந்தனர்.

அதனால் கடவுச்சீட்டு திணைக்களம் முன்பாக பதற்ற நிலமை நிலவியமையுடன் வவுனியா பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி ஆர்.கே.கே.பியரத்தன தலமையிலான பொலிஸ் குழுவினர் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய காரியாலயத்தினுள் சென்று ஆணையாளருடன் கலந்துரையாடினார்.

இன்று மேலதிக நபர்களை உள்ளெடுக்க முடியாது எனவும் , பிரிதொரு தினத்தில் கடவுச்சீட்டினை பெருவதற்கு முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கான இலக்கம் வழங்குவதாக ஆணையாளர் உறுதிமொழி அளித்துள்ளதாகவும்,

கடவுச்சிட்டினை பெற வருபவர்களிடம் பணம் பெற்று வரிசையில் ஈடுபடுத்துபவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுவதாக வவுனியா பொலிஸ் நிலைய சமூக சேவை நிலைய பொறுப்பதிகாரி,

ஆர்.கே.கே.பியரத்தன தெரிவித்தமையினையடுத்து சுமுகமான நிலமைக்கு பொதுமக்கள் வந்தமையுடன் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளினால் பிரிதொரு தினத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சிட்டை பெறுவதற்கான இலக்கமும் வழங்கப்பட்டது.