வவுனியா நகர்ப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!!

594

வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் டெங்கினை வவுனியா மாவட்டத்தில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை,

பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் இராணுவத்தினர், பொலிஸார், வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் இணைந்து டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பல இடங்களில் இன்றைய தினம் (03.02.2024) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல்களை அடையாளப்படுத்தல் மற்றும் அவற்றை அப்புறப்படுத்துதல், அதே நேரம் நுளம்பு பெருக்கத்திற்குச் சூழல் காணப்படும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களை அடையாளப்படுத்தும் முகமாகச் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், டெங்கு ஒழிப்பு செயலணி உத்தியோகத்தர்கள், பாதுகாப்புத் துறையினர் விசேட கள விஜய செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர்.

அதே நேரம் வவுனியா வவுனியா நகர மத்திய பகுதிகளைச் சூழ உள்ள பகுதிகள் இராணுவத்தினரின் உதவியுடன் விசேட சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டமையுடன் நகரசபையின் உதவியுடன் குப்பைகளும் அகற்றப்பட்டன.

அத்துடன் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.