பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற மசூதி அருகே குண்டு வெடித்தது. தற்கொலைப்படை தீவிரவாதி மனித குண்டாக வந்து இந்த தாக்குதலை நடத்தினான்.
அதில் 9 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30 பேர் பரிதாபமாக இறந்தனர். 70–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும் அருகில் இருந்த பல வீடுகள், கடைகளும் சேதம் அடைந்தன.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு லஷ்கர்–இ–ஜாங்வி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.இதுதவிர பெஷாவர் மற்றும் சில இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தன.
ஒரே நாளில் நடைபெற்ற இந்த தாக்குதல்களில் மொத்தம் 53 பேர் உயிர் இழந்தனர். சுமார் 140பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்.
தலீபான்களுடன் சமரச பேச்சு நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பாகிஸ்தான் சென்றுள்ளார். இந்த நிலையில் தான் தீவிரவாதிகள் பல இடங்களில் தாக்குதல் நடத்தி பலரை பலி கொண்டுள்ளனர்.