வவுனியாவில் புத்தாண்டை முன்னிட்டு சுகாதாரப் பரிசோதகர்கள் திடீர் சோதனை!!

1115

புதுவருடப் பிற்ப்பை முன்னிட்டு வவுனியாவில் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பை முன்னிட்டு வவுனியா நகரப்பகுதி, வைரவபுளியங்குளம், குருமன்காடு ஆகிய பகுதிகளில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள், வெதுப்பகங்கள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் சுகாதார பரிசோதகர்களால் இன்று (08.04) சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கடந்த சிலநாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு பழுதடைந்த பொருட்களை விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைகள் பொறிக்கப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 8 பேருக்கு எதிராக முதல் கட்டமாக வவுனியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன்,

அதில் 6 பேருக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும்மொரு வழக்கு திகதியிடப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மக்களுக்கு பாதுகாப்பானதும், சுகாதாரமானதுமான பொருட்களை வழங்கும் பொருட்டு சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.