200 கோடி சொத்தை தானம் செய்து துறவியான தம்பதியினர் : ஏன் தெரியுமா?

700

தங்களுடைய ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி தம்பதியினர் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர்.

இந்திய மாநிலமான குஜராத், ஹிம்மத்நகரை சேர்ந்த தொழிலதிபர் பாவேஷ் பண்டாரி (Bhavesh Bhai Bhandari). இவர், சபர்கந்தா மற்றும் அகமதாபாத் ஆகிய இரு நகரங்களிலும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரும், இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில் ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

இவர்களின், 19 வயது மகளும் 16 வயது மகனும் கடந்த 2022 -ம் ஆண்டு துறவறத்தை ஏற்றுக் கொண்ட நிலையில், தற்போது பாவேஷ் பண்டாரியும், அவரது மனைவியும் துறவறத்தை ஏற்கின்றனர் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டு, நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

இவர்கள் தங்களிடத்தில் இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே வைத்திருப்பார்கள். இதைத்தவிர வேறு பொருட்கள் வைத்திருப்பதற்கு அனுமதியில்லை.

வரும் ஏப்ரல் 22-ம் திகதி தம்பதியினர் உறுதிமொழியை ஏற்ற பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். தற்போது, இந்த சம்பவம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.