வவுனியா நகரசபை உபநகரபிதா வீட்டில் திருடப்பட்ட 60 பவுண் நகைகள் வீட்டின் கூரையில் இருந்து மீட்பு!!

2721

வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவின் வீட்டில் திருடப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமதியான 60 பவுண் நகைகள் அவரது வீட்டு கூரையில் இருந்து இன்று (25.04) மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரான வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதா அவர்களின் கோவில்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பகல் 60 பவுண் நகையும், கடவுச் சீட்டு ஒன்றும் திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளரால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறித்த விசாரணைகளின் போது அவர்களது வீட்டில் இருந்த சீசிரீவி கமராக்களும் காணாமல் போயிருந்தமை தெரியவந்தது.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் திருடப்பட்ட குறித்த வீட்டின் கூரைப்பகுதியில் கீழ் சூட்சுமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 60 பவுண் நகைகளும் மீட்டுள்ளதுடன், கடவுச் சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் வீட்டில் நின்றவர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்து தங்கியிருந்த அவர்களது உறவினர் ஆகியோர் பொலிசாரால் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நகைகள் மீட்க்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் உள்ளதுடன் அதனை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிசார் மேலும் தெரிவித்தனர்.