அமெரிக்கா கண்காணிப்பு: ஸ்நோவ்டன் கசியவிட்டுள்ள புதிய தகவல்..!

368

பிரிட்டனின் கார்டியன் செய்தி நாளிதழுக்கு கசியவிடப்பட்டுள்ள புதிய தகவல்களின்படி, பிரான்ஸும் கிரேக்கமும் இத்தாலியும் அமெரிக்காவின் உளவுத்துறைக் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐரோப்பாவைச் சேராத-கூட்டாளி நாடுகளும் அமெரிக்காவின் என்எஸ்ஏ புலனாய்வுத்துறையினால் இலக்குவைக்கப்பட்டுள்ளதாக கசிந்துள்ள ஆவணமொன்று கூறுகிறது.இதில் ஜப்பான், மெக்ஷிகோ, தென்கொரியா, இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட அமெரிக்காவின் ஏனைய கூட்டாளி நாடுகளும் அடங்குகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகங்களும் அமெரிக்காவினால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனிய சஞ்சிகையொன்று தகவல் வெளியிட்டுள்ள நிலையில், இப்போது இந்த புதிய தகவல் கசிந்துள்ளது.கார்டியனுக்கு கசியவிடப்பட்டுள்ள 2010- ரகசிய ஆவணமொன்றின்படி, 38 வெளிநாட்டுத் தூதரகங்களும் என்எஸ்ஏ-இன் கண்காணிப்பு பட்டியலில் இருந்துள்ளன.
அமெரிக்கா இதுபற்றி உரிய விளக்கமளிக்க வேண்டுமென்று பல நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க புலனாய்வுத் துறையின் முன்னாள் கணினி நிபுணரான ஸ்நோவ்டன் தான் இந்தத் தகவல்களையும் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அமெரிக்கா அவரது பாஸ்போர்ட்டை மீளப்பெற்றுக்கொள்வதாக அறிவித்தபடியால், ஈக்வடோரில் தஞ்சம் கோரியிருந்த ஸ்நோவ்டனால் ரஷ்யாவை விட்டு இன்னும் வெளியேற முடியாதநிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.