17 ஆண்டுகளாக பெண்ணின் நுரையீரலில் சிக்கிய மூக்குத்தி!!

163

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தா கோட்டையில் வசித்து வரும் 44 வயது பெண் வர்ஷா ஷாகு. இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பல ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இதனையடுத்து ஆஸ்துமாவாக இருக்கலாம் எனக் கருதி அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் வேறொரு சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நுரையீரலில் ஏதோ ஒரு சிறிய பொருள் சிக்கியிருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சிறப்பு பரிசோதனையில் அந்த பெண்ணின் நுரையீரலில் தங்க மூக்குத்தியின் ஒரு பாகம் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது. ரிஜிட் பிராங்கோஸ்கோப்பி என்ற அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அந்த மூக்குத்தியின் சிறிய பாகத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். தற்போது அந்த பெண் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து ‘கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் நான் அணிந்திருந்த மூக்குத்தியின் ஒரு பாகம் உடைந்து காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவே இல்லை.

அது தற்போது நுரையீரலில் சிக்கி இருந்தது கண்டறியப்பட்டது” எனக் கூறினார். அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ‘அந்த பெண் தூங்கும் போது மூக்குத்தியின் பாகம் உடைந்து வாய் வழியாக நுரையீரலுக்குள் சென்றிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார்.