இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செவிலியராக பணியாற்ற பிரித்தானியா (UK) செல்ல தயாராக இருந்த இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கேரளாவின் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சூர்யா சுரேந்திரன் என்ற இளம்பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் பிரித்தானியா செல்ல தயாராக இருந்த நிலையில் அண்டை வீட்டாரிடம் விடைபெற சென்றுள்ளார்.
இதன்போது தொலைபேசி அழைப்பில் உரையாடிய படியே தன்னை அறியாமலேயே ஒரு அரளி இலை மற்றும் பூவை பிடுங்கி மென்றதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து ஆலப்புழா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவர் சாப்பிட்ட இலை, பூவின் விஷத்தை வெளியேற்ற முயன்றதுடன் உடல்நிலை சீராகவே அவர் வீடு திரும்பியுள்ளார்.
எனினும், அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்ததால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அரளி பூ மற்றும் இலையின் விஷமே அவரது மரணத்திற்கு காரணம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.