திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகவில்லை.. பெண் மர்மமான முறையில் மரணம்!!

175

வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் புவனேஸ்வரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100 எண் கால் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று புவனேஸ்வரி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுதாகர் வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து பெண் காவலரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது.

புவனேஸ்வரிக்கும் அவரது கணவர் சுதாகருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் புவனேஸ்வரியின் தந்தை முரளி தனது மகளை கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் மனைவி இறந்ததாக தகவல் அறிந்த கணவன் சுதாகர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஓராண்டுகளே ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.

வாணியம்பாடி அருகே எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மற்றும் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.