சாதி மறுப்பு காதல்.. கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

310

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இராமநாதபுரம் புல்லாணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கொத்தனார் கூலி தொழிலாளியான இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த செவிலியரான சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு அஜய்(16) என்ற மகனும் அக்ஷிதா(12) என்ற மகளும் உள்ளனர். சரண்யா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் கணவனுக்கு தெரியாமல் அதிகமாக கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை தன்னுடன் பழகிய இளைஞர் ஒருவருக்கும் கொடுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மனைவியின் அதீத கடன் விவகாரம் கணவனுக்கு தெரியவரவே அது குறித்து மனைவி சரண்யாவிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார் பன்னீர் செல்வம். அதற்கு சரண்யா முறையான காரணம் சொல்லவில்லையென கூறப்படுகிறது.

எனவே கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அருகருகே உள்ள தெருவில் இருவரும் வசித்து வந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் பன்னீர்செல்வத்தோடும் சரண்யா அவரது தந்தையோடும் இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சரண்யா பன்னீர்செல்வத்தின் மகள் பூப்பெய்த நிலையில் உறவினர்கள் இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்ததோடு கடனை சமாளிக்க நீராட்டுவிழா வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு கடனை அடைத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் மகள் காலில் அணிந்திருந்த கொலுசு காணாமல் இருந்ததை பார்த்த பன்னீர் செல்வம் அது குறித்து கேட்கவே அம்மா வாங்கி சென்றதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் கேட்க போன போது சரண்யா காலில் இருந்த கொலுசும் காணாமல் இருந்ததை பார்த்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏதேதோ காரணம் சொல்லி இறுதியாக அதனை விற்றதை அறிந்து மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று இரவு பன்னீர் செல்வம் அவரது வீட்டின் முன்பாக தலை குப்புற கிடந்ததாக சொல்லப்படுகிறது.

அவரது மகன் அவரை எழுப்பி பார்த்த போது வயிற்றில் குத்துப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . . இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக சரண்யாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு சரண்யா வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

சம்பவ இடத்தில் ஏ.எஸ்.பி சிவராமன் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சரண்யாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சரண்யாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.