டுபாய்க்கு சென்ற மகள் 5 வருடங்களாகியும் வீடு திரும்பவில்லை : மீட்டுத்தருமாறு தாய் மன்றாட்டம்!!

292

Dubai

டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஐந்து வருடங்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அவரை மீட்டுத் தருமாறும் அப்பெண்ணின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தளை பிட்டகந்த பெரியசெல்வகந்தை பிரிவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான சுப்பிரமணியம் பிரபாஜினி (34) என்பவரே கடந்த 2009ம் ஆண்டு டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.

இதுவரையில் அவர் தொடர்பாக எவ்வித தகவலும் இல்லாதிருப்பதாக அப்பெண்ணின் தாயாரான மேரி நவஜீவனம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தனது மகளின் தகவல்களைப் பெற்றுத்தருமாறும் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் சம்பந்தப்பட்ட முகவர் நிலையம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றில் முறைப்பாடுகள் செய்துள்ளபோதிலும், அது தொடர்பில் எவ்வித கவனமும் செலுத்தப்படவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டுபாய் சென்ற தனது மகள், ஒப்பந்த காலத்தின்போது தம்முடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் பணம் அனுப்பியதாகவும் தெரிவித்துள்ள தாயார், ஒப்பந்த காலம் நிறைவடைந்ததன் பின்னரே அவரிடமிருந்து எவ்வித தொடர்புகளும் இல்லாது போயுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அவருக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது கூற என்னால் கூற முடியாதுள்ளது. எனது மகளை நாட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் தந்துவிடுமாறே நான் மன்றாடிக் கேட்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எனது மகளின் நிலைமைகளைக் கண்டறியுமாறும், அவரோடு தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறும் எனது மகளை வேலைக்கு அனுப்பிய முகவர் நிலையத்திடமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமும் முறைப்பாடுகளை செய்துள்ளேன்.

எனினும், எவருமே இதுவரையில் எனக்கு உரிய பதிலையும் தரவில்லை. எனது மகளையும் மீட்டுத்தரவில்லை. இவ்விடயத்தில் பாராமுகம் காட்டியும் அலட்சியப்படுத்தியும் வருகின்றனர்.

எனது மகளின் நிலைமையை நினைத்து கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லாது தவிக்கிறேன். அதிகாரிகள் கருணை காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அப்பெண்ணின் தாயாரான மேரி நவஜீவனம் கோரிக்கை விடுத்துள்ளார்.