வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வேலூர் சிறையில் முருகனிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 15 நாட்களுக்கு ஒருமுறை நளினியை சந்தித்து வரும் முருகன் கடந்த 12ம் திகதி அவரை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அப்போது அனுமதி மறுக்கப்பட்டது.
அதேபோல் 15 நாள் கழித்து சந்திக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முருகனிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்யவில்லை.
எனினும் சிறைவிதிகளுக்கு மாறாக பணம் வைத்திருந்ததால் அவருக்கு 2 மாதம் மனைவி நளினியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நளினி ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார். ஜெயிலில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்துள்ளார். பெண்கள் ஜெயில் அதிகாரிகள் நளினியை சமரசம் செய்தனர்.
அப்போது நளினி, எனக்கு எல்லாமே எனது கணவர் தான் அவரை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கூறி கண்ணீர் விட்டுள்ளார். அதிகாரிகள் சமரசத்தையடுத்து நளினி ஜெயிலில் உணவை சாப்பிட்டார்.
நேற்று வழக்கம் போல நளினி காலை உணவு சாப்பிட்டார். கொஞ்சம் கவலையாக இருக்கிறார் என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.