இராணுவ ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் தமது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதன் மூலம் இலங்கை இராணுவத்தினர் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால், ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அவர்கள் ஜெனரலாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.
அத்துடன் வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் பாதுகாப்புப் பிரதானியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க அவர்கள் லெப்டினன் ஜெனரல் என்ற தரத்தோடு ஆகஸ்ட் முதலாம் திகதி இராணுவ தளபதியாகப் பொறுப்பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வவுனியா ஆயுதப் படைகளின் தலைமையகத்திற்க திங்களன்று விஜயம் செய்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் நாட்டில் உள்ள இரண்டு இலட்சம் படையினருடைய நலன்களை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரம், குருணாகலை உள்ளிட்ட மூன்று இடங்களில் யுத்தத்தின்போது அவயவங்களை இழந்த படைச் சிப்பாய்களை வைத்துப் பராமரிப்பதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வன்னியில் படையினர் வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ முகாம்களுக்குத் தேவையான கட்டிட வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறினார்.
(BBC)