உத்தரபிரதேசத்தை சேர்ந்த சிருஷ்டி துலி (25) என்பவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருகிறார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் பைலட்டாகப் பணிபுரிய தொடங்கியதில் இருந்து, மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பயிற்சிக்காக டெல்லி சென்றபோது ஆதித்யா பண்டிட் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் கடந்த 25ம் தேதி வரை ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அன்று ஆதித்யா காரில் டெல்லி சென்றார்.
அப்போது, சிருஷ்டி செல்போனில் அழைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஆதித்யா வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.
நண்பர் ஒருவர் கதவைத் திறந்து பார்த்தபோது, டேட்டா கேபிளில் சிருஷ்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டார்.
உடனடியாக சிருஷ்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிருஷ்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆதித்யா சிருஷ்டியை அடித்து துன்புறுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் அவர் தனது காதலியை அசைவ உணவு உண்ணக் கூடாது என்று வற்புறுத்தியதாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி ஆதித்யாவை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.