வவுனியாவில் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் : பேருந்து நிலையத்தில் அமைதியின்மை!!

1056

வவுனியா பேருந்து நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்துச் சபையின் நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து தரப்பினருக்கு இடையில் நேற்றையதினம் (03.12) வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து கல்முனை நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த அரச பேருந்து ஊழியர்களுக்கும், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் இடையில் புறப்படுகின்ற நேரம் தொடர்பில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே நேரக்கணிப்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், அரச பேருந்து ஒன்றும் தனியார் பேருந்தும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.