
இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐரோப்பியர்களுக்கு உரிமை கிடையாது என 2013 பூலோக அழகி பட்டத்தை வென்ற கார்டியா வெக்னர் கூறியுள்ளார்.
அதேபோல் ஆசியாவை பற்றி விசாரணை நடத்தும் உரிமையும் ஐரோப்பியர்களுக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை சென்றுள்ள அவர், கொழும்பில் தொலைக்காட்சிக்கு ஒன்று வழங்கிய செவ்வியில் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐரோப்பியர்களுக்கே உரித்தான கலாசாரம் உள்ளது. இலங்கையர்களுக்கே உரித்தான தனியான கலாசாரம் உள்ளது.
ஐரோப்பியர்களின் கலாசாரம் வேறானது, அதனை இலங்கையர்கள் புரிந்து கொள்ள முடியாது. இலங்கையுடன் நான் மிகவும் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன்.
இலங்கை என்பது மோதல்கள் இன்றி மிகவும் அமைதியான சூழலை கொண்ட நாடு. இலங்கை தொடர்பில் எனக்குள் ஏற்பட்டுள்ள இந்த உணர்வை சர்வதேசம் வரை கொண்டு செல்வேன் எனவும் கார்டியா வெக்னர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த கார்டியா வெக்னர் கடந்த 30 ஆம் திகதி இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையில் தொலைக்காட்சி ஒன்று இன்று நடத்தும் அழகி ராணி போட்டியில் வெற்றி பெறும் பெண்ணுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வில் அவர் கலந்து கொள்ள உள்ளார்.





