உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குளறுபடி குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!!

671

AL

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குழறுபடி தொடர்பில் விசாரணை நடாத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாளில் குழறுபடிகள் காணப்பட்டதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

லண்டன் உயர்தரப் பரீட்சையின் கடந்த கால வினாத்தாள்களின் கேள்விகள் அப்படியே பிரதி செய்யப்பட்டு 2013ம் ஆண்டுக்கான பரீட்சை வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வினாத்தாள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் லண்டன் உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களில் உள்ளடக்கப்பட்டிருந்த 21 வினாக்கள், கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாளில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான ஆதாரங்களையும் சில ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.

வினாத்தாள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, பரீட்சைகள் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை பொருளியல் வினாத்தாளிலும் பிரச்சினைகள் காணப்படுவதாக சில ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் கோரியுள்ளார்.