இலங்கையின் யுத்த சூனிய வலய கொலைக்களம் காண்பித்த மூவர் கைது..!

426

இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின் திரையீட்டுக்கு இரண்டு அரசசார்பற்ற நிறுவனங்கள் – கோலாலும்பூர், சிலாங்கூர் சீன அசெம்ளி மண்டபத்தின் சிவில் உரிமை குழுவும் கோமாஸும் – ஏற்பாடு செய்திருந்தன.

படத்தைத் திரையிட்ட 10 நிமிடங்களில் உள்துறை மற்றும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் 30 பேர் சென்று படத்தையும் படத்தைத் திரையிட உதவிய கணினியையும் பறிமுதல் செய்ய முற்பட்டனர்.

ஏற்பாட்டாளர்கள் பேச்சு நடத்தியதை அடுத்து படத்தைத் திரையிட அனுமதித்த அவர்கள்,பின்னர் ஏற்பாட்டாளர்களில் மூவரை பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இலங்கையின் உள்நாட்டுப் போரின் கடைசி நாள்களில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களை அப்பட்டமாக சித்திரிக்கும் இந்த ஆவணப்படம் உலகெங்கும் திரையிடப்பட்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதைத் தயாரித்த குழுவினரின் பெயர்கள் 2012 நோபெல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.