ரேபிஸ் நோய் தாக்கி 6 வயது சிறுமி பரிதாபமாக பலி!!

34

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள செருத்திருத்தி பகுதியைச் சேர்ந்த அலி சகாபி – சபியா தம்பதியின் 6 வயது மகள் சன்ஹா மஹ்ரின், ரேபிஸ் நோய் தாக்கிக் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

1ம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, கடந்த மாதம் 27-ம் தேதி சாலையில் நடந்து சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆரம்பத்தில் சிறுமியின் மரணத்திற்கான காரணம் சரியாகத் தெரியாததால், அது இயற்கைக்கு மாறான மரணமாகக் கருதப்பட்டது. ஆனால், சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு குப்பைக் குழியில் விழுந்து கையில் காயம் அடைந்ததாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து சிறுமியின் உமிழ்நீர் மற்றும் கண் கசிவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுத் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தப் பரிசோதனையின் முடிவில், சிறுமிக்கு வெறிநாய் கடி மூலம் பரவும் ரேபிஸ் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

நாய் கடித்தது சிறுமிக்குத் தெரியாமல் இருந்ததா அல்லது காயம் ஏற்பட்ட போது கவனிக்கத் தவறினார்களா என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், செல்லப் பிராணிகள் மற்றும் தெருநாய்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.