சிறுமி கொலை வழக்கில் திடீர் திருப்பம் : தாயே கொன்றது அம்பலம்!!

26

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 10 வயது மகளைக் கொலை செய்துவிட்டு, மர்ம நபர்கள் நகைக்காகக் கொன்றுவிட்டதாக நாடகமாடிய தாய் சத்யாவை (30) போலீசார் கைது செய்துள்ளனர்.

முருகவேல் – சத்யா தம்பதியின் மகள் வர்ஷினி, கண்டாச்சிபுரத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று வர்ஷினி மர்மமான முறையில் சடலமாகக் கிடந்த நிலையில், அவரது கழுத்தில் இருந்த நகை திருடு போயிருந்ததால் போலீசார் முதலில் மர்ம நபர்களைத் தேடி வந்தனர்.

இருப்பினும், சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது வாயில் துணி நூல்கள் இருந்தது கண்டறியப்பட்டதால் போலீசாருக்குத் தாய் மீது சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து சத்யாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாக மகளின் வாயில் துணியை வைத்து அமுக்கிக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் இந்தக் கொலையை மறைப்பதற்காக மகளின் கம்மல்களைக் கழற்றி எறிந்துவிட்டு, நகைக்காக யாரோ கொன்றுவிட்டதாக ஊர் மக்களை நம்ப வைத்ததும் தெரியவந்தது.

மகளையும் கொன்று விட்டுத் தானும் தற்கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் பயம் காரணமாக அந்த எண்ணத்தைக் கைவிட்டு நாடகமாடியதாகவும் சத்யா தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவரைக் கைது செய்த கண்டாச்சிபுரம் போலீசார், அவரை வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே தனது மகளை இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம், திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.