நாடு முழுவதும் சீரற்ற காலநிலை : தயார் நிலையில் அனர்த்த முகாமைத்துவ குழுவினர்!!

3

நாடு முழுவதும் சீரற்ற காலநிலை மற்றும் அனர்த்த நிலைமைகளை கருத்திற்கொண்டு, தயார்நிலை மற்றும் மீட்புக் குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்புலி தெரிவித்துள்ளார்.

எந்தவொரு அவசர நிலையிலும் அனர்த்த காமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த விசேட இலக்கம் 24 மணிநேரமும் இயங்கும் என அவர் குறிப்பிட்டார். அனைத்து மாவட்ட அனர்த்த மேலாண்மை நிலையங்களும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். எனவே, கனமழையுடன் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற இடங்களில் நீராடுவது மிகவும் ஆபத்தானது. கடந்த சில நாட்களில் பாதுகாப்பற்ற இடங்களில் நீராடியதால் பல மரணங்கள் பதிவாகியுள்ளன.

இடி, மின்னல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும்.. திறந்தவெளிகளில் விளையாடுவதோ அல்லது வேலை செய்வதோ தவிர்த்தல் வேண்டும். அத்துடன் நிலையான தொலைபேசிகளை பயன்படுத்துவது அபாயகரமானது.

வீடுகளில் இருக்கும் போது மின்சார உபகரணங்களின் இணைப்புகளைத் துண்டித்து வைப்பது பாதுகாப்பானது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.