கிளிநொச்சியில் கோர விபத்து : பாடசாலையில் பிள்ளையை ஏற்றச் சென்ற தாய் உயிரிழப்பு!!

38

கிளிநொச்சி – கரடிபோக்கு, உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல் இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உருத்திரபுரம் பகுதியிலிருந்து கரடிபோக்கு நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த தாய், பாடசாலை முடிவடைந்த தனது மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காகவே சென்றுள்ளார்.

இதன்போது, கரடிபோக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக அதிவேகமாக வந்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள், இவர்களது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள், தங்களது பெரிய ரக (Racing) மோட்டார் சைக்கிளில் அந்த வீதியில் தொடர்ந்து மிக அதிவேகமாக ஓடித்திரிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடுமையாக மோதுண்டதன் காரணமாக, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களில் ஒருவனும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் உடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்