இலங்கை கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

30

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன.

அதற்கமைய, தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையில் கடன் அட்டைகளை பயன்படுத்தும் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படவுள்ளனர்.

அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்காக பலரும் இந்த அட்டைகளை பயன்படுத்தி வரும் நிலையில், ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அவர்களுக்குப் பெரும் சுமையாக இருக்கும் என நிதி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமீபத்தில் தனது கொள்கை வட்டி வீதத்தை ஒரு சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

இதன் நேரடித் தாக்கம் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, இதுவரையில் கடன் அட்டைகளுக்கு நிலவிய 26 சதவீதம் என்ற வருடாந்த வட்டி வீதத்தை, ஜுலை முதலாம் திகதி முதல் 28 சதவீதமாக அதிகரிப்பதற்கு சில வங்கிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

மத்திய வங்கியின் தரவு அறிக்கைகளுக்கமைய, இந்த ஆண்டு மார்ச் மாதமளவில் இலங்கையிலுள்ள கடன் அட்டை வைத்திருப்பவர்கள் வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் நிலுவை 194,105 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.